டீச்சர். டீச்சர். .’’ பெருத்த குரலோடு ஓடிவருகிறாள் இன்பா.
“ஏன் இவ்ளோ வேகமா வர்ற?. என்னன்னு சொல்லுமா இன்பா...”
“டீச்சர், நீங்க ஆண், பொண்ணுன்னு எல்லோரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பீங்கன்னு தெரியும். ஆனா இதுல மட்டும் ஏன் இப்படி?”
“என்னன்னு விளக்கமா சொல்லேன் இன்பா...”
“சூர்யா என் வகுப்புலதான் படிக்கறான். அவனுக்குக் கொடுத்த யூனிஃபார்ம் சட்டைல பாக்கெட் இருக்கு. கால் சட்டைல கூட ரெண்டு பாக்கெட்டு இருக்குது. என்னோட ஆடைல ஒண்ணு கூட இல்லியே... ஏன் டீச்சர்?”
பாக்கெட் வேணுமா இன்பா... வா உட்கார். உனக்கொரு கதை சொல்றேன்!”
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்திரியா அரசர் இரண்டாம் ஃபெர்தினாந்து முதன்முதலில் ‘பாக்கெட் பவுச் பயன்படுத்தினார். இது ஆடையுடன் தனியாகத் தொங்கும். பின்னாளில் பாக்கெட் தோன்ற இதுவே காரணம்.
“300 வருசத்துக்கு முன்ன யார் ஆடையிலும் பாக்கெட் வச்சு தைக்கற பழக்கம் இல்ல. காசு கண்டுபிடிச்சதுக்கப்புறம் அதைப் பத்திரமா வச்சுக்கணும்னு ஆண்கள் பேண்ட்ல பாக்கெட் தச்சு போட்டுக்கிட்டாங்க. அப்போ ஆண் மட்டும் வெளில போய் சம்பாதிக்க சமூகம் அனுமதிச்சதால, அவங்க மட்டும் உடைல பாக்கெட் வச்சுக்கிட்டாங்க. பொண்ணுங்க தான் வீட்லயே இருந்தாங்களே. வெளிய போய் சம்பாதிக்கிறதுக்கு பொண்ணுக்கு அப்போ அனுமதி இல்ல.”
“இந்த மாதிரி சூழல்ல போர் வந்தது. ஆண்களை மட்டும் கூப்பிட்டா போதாது. ஆள் பற்றாக்குறைனால பெண்களும் போருக்கு வரலாம்னு சொன்னாங்க. அங்க ஆண், பெண் இருவருக்கும் ஒரே உடை தான்.
ஏன்னா துப்பாக்கி, குண்டு, மருந்து பொருள்கள் எல்லாம் வச்சிக்க பாக்கெட் வேணும்ல? அதனால...” “அங்க போன பெண்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாயிடுச்சு. ஆகா, இத்தனை பாக்கெட் இருக்கே, எல்லாத்தையும் கையில வச்சிக்கத் தேவையில்ல.
பாக்கெட்டுலயே வைச்சுக்கலாம். இந்த மாதிரி உடைல பாக்கெட் வச்சு தராங்கன்னே சில பெண்கள் போருக்கு போனாங்க இன்பா..
’ பெண்கள் முதன்முதலில் பாக்கெட் வைத்த ஆடைகளைப் பயன்படுத்தத் தொடங்கியது இரண்டாம் உலகப் போரில் தான்!
“போருக்கு போகும் போது, ‘ஆகா, நாங்க பாக்கெட் வச்ச ஆடை போடப் போறோம்’னு எல்லார்கிட்டயும் மகிழ்ச்சியா சொல்லிக்கிட்டே போனாங்கன்னா பாரேன்.
“பாக்கெட்டுக்காகவா போருக்கு போனாங்க மிஸ்?”
“ஆமாமா...ஆனா போர் முடிஞ்சதும் அந்த ஆடை போட அனுமதி இல்லை. அதுவுமில்லாம போர்ல போட்டதை தினசரி போடமாட்டமில்ல? அதனால திரும்ப பாக்கெட் இல்லாமயே பெண்கள் ஆடை போட வேண்டியதா போச்சு.”
“இப்ப வரைக்கும் பெண்களோட சில ஆடைகள்ல பாக்கெட் வைச்சிருந்தாலும் பெரும்பாலான ஆடைகள்ல பாக்கெட்டே இருக்கறதில்லை. ஆனா வயது வித்தியாசம் இல்லாம எல்லா ஆண்கள் ஆடைகளிலும் பாக்கெட் வைச்சு தைக்கப்படுது.”
“பெண்கள் ஆடைகள்ல பாக்கெட் இல்லாததால் பொருள்கள் பணம் போன்ற முக்கியமானவைகளை கைகளிலோ அல்லது அதுக்குனு தனிப்பைகளிலோ கொண்டு போக வேண்டியதா இருக்குது. அதனால பொருள்கள் மேலயே எப்போது கவனம். செலுத்த வேண்டியதாவும் இருக்கு. அது முடியாதபோது பொருள் இழப்பும், வேலைப் பளுவும் பெண்களுக்கு ஏற்படுது. இருக்குற சுமைல இதுவொரு கூடுதல் சுமைன்னுதான் சொல்லணும் இன்பா..
“நீ சொல்ற மாதிரி பாக்கெட் வச்சா இது போன்ற சிரமங்கள் இல்லாம நல்லா இருக்கும்தான். அருமையான கேள்வி இன்பா. நம் அரசாங்கம் அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடை தருது. அதுவுமில்லாம அரசாங்கம் பெண் கல்வி மேம்பாடு அடைய பல திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருது.”
“பாரு... ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சின்னத்துலகூட பெண் குழந்தைதான் முதல்ல இருக்கு பிறகுதான் ஆண் குழந்தை விதந்த படம் வைச்சிருக்கு அரசு. அதனால பெண் குழந்தைகளுக்கான சீருடைகளிலும் பாக்கெட் வைங்கன்னு அரசாங்கத்திடம் இன்பா அனைத்து பெண் குழந்தைகள் சார்பா கோரிக்கை வைக்கறான்னு சொல்லுவோம்.
அடுத்த வருடம் தவறாம உன்னைப்போல பெண்களுக்கான ஆடைகளில் பாக்கெட் தச்சி தருவாங்க. நீங்களும் பொருள்களைப் பத்திரமா வைத்துக் கொள்வீங்கன்னு நம்புவோம் இன்பா...
சரியா?” “ரொம்ப அருமைங்க டீச்சர். எங்களுக்கும் பாக்கெட் வேணும் இதை அரசாங்கத்துக்கிட்ட சொல்லிடுங்க. அம்புட்டுதேன்.”
“சரிடா செல்லம். மாற்றம் நடக்கும் கவலைப்படாத வீட்டுக்குப் போ...” – சாந்தசீலா